தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள்.. கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த குரல்
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ், ம.ஜ.த. உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என வலியுறுத்தின.
காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாராசாமி, அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் மற்றும் மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். மேலும் தமிழகத்திற்கு மேற்கொண்டு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கூடாது என தேவகவுடா உள்ளிட்டோர் தெரிவித்தனர். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.