நித்யானந்தா சாமியாரை பிடிக்க ஹரித்வார் விரைந்த கர்நாடக போலீஸ்
பெங்களூர்: சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய ஹரித்துவாருக்கு தனிப்படை சென்றுள்ள நிலையில், பெங்களூர் அடுத்த பிடதியில் அவரது ஆசிரமத்துக்கு எதிரே கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது கர்நாடக ஐகோர்ட். ஆனால் ஆண்மை சோதனை நடத்த நித்யானந்தா ஒத்துழைக்காத நிலையில், அவருக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், போலீசார் சென்றபோது, நித்யானந்தா பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இல்லை. அவர் ஹரித்வார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய போலீஸ் தனிப்படை ஹரித்துவார் விரைந்துள்ளது. இந்நிலையில், கஸ்தூரி கன்னட வேதிகே அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா, தலைமையில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பிடதி ஆசிரமத்தின் வெளியே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ரமேஷ் கவுடா கூறுகையில் "கன்னடர்கள் காசு வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று நித்யானந்தா அகவுரவமாக பேசியுள்ளார். விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியுள்ளார். எனவே உடனடியாக நித்யானந்தாவை கைது செய்வதுடன், கர்நாடகாவைவிட்டு நித்யானந்தாவை வெளியேற்ற வேண்டும்" என்றார்.