அதிமுகவினர் கொடுத்த லட்டை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய கர்நாடக போலீஸ்!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று அதிமுகவினர் கொண்டாடித் தீர்த்து விட்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கர்நாடக போலீஸாரும் கலந்து கொண்டு லட்டுக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாயில் வாங்கிப் போட்டுக் கொண்ட காட்சியையும் காண முடிந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று லட்டுதான் அதிக அளவில் சேல்ஸ் ஆன ஸ்வீட்டாக இருக்க முடியும். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அதிமுகவினரை லட்டும் கையுமாக பார்க்க முடிந்தது. பஸ் நிலையங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் லட்டு கொடுத்துக் கொண்டாடினர். மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டங்கள் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியிலும் காணப்பட்டது, களை கட்டியிருந்தது.
அங்கு கூடிய நூற்றுக்கணக்கான தொண்டர்கள் லட்டுக்களை விநியோகித்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். மேலும் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக போலீஸாருக்கும் லட்டுக்களைக் கொடுத்தனர்.
கர்நாடக போலீஸாரும் சிரித்தபடி லட்டுக்களைப் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இத்தனை நாட்களாக தேவுடு காப்பது போல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கஷ்டம் ஒரு வழியாக தீர்ந்தது என்ற மகிழ்ச்சிப் புன்னகையாக அது தெரிந்தது.
சில போலீஸார் இரண்டு மூன்று லட்டுக்களையும் கூட அள்ளியதைப் பார்த்து அதிமுகவினரே புல்லரித்துப் போய் விட்டனர்!