கோர்ட் உத்தரவுடன் சசிகலாவை விசாரிக்க வாங்க.. ஐடி துறைக்கு கர்நாடக சிறைத்துறை தகவல்
நீதிமன்றம் ஆணையில்லாமல் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று வருமான வரித் துறையினருக்கு கர்நாடக சிறை துறை தெரிவித்துள்ளது.
பெங்களூர்: உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, இளவரசியிடம் நீதிமன்ற ஆணையில்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக சிறை நிர்வாகம் வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
தங்க நகைகள் பறிமுதல்
சுமார் 5 நாள்கள் நடந்த மாபெரும் ரெய்டின்போது ரூ.1430 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கோடிக்கணக்கான நகைகள், ரொக்கமும் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
லேப்டாப் பறிமுதல்
இதையடுத்து போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த 4 அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்து ஒரு டெம்போ நிறைய பென் டிரைவ், லேப்டாப், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையில் தகவல் இல்லை
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலக்ததில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து இளவரசி மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்பிரியாவிடம் அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். எனினும் அவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகே தாங்கள் நிர்வகித்து வருவதால் அதற்கு முன்னர் நடந்தவை குறித்து தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளனர். மேலும் 2015-க்கு முன்னர் சசிகலா, இளவரசியும் நிர்வாகிகளாக இருந்தது தெரியவந்தது.
சிறை துறைக்கு கடிதம்
முக்கிய ஆவணங்கள், வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்த சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிறை துறை நிர்வாகத்துக்கு வருமான வரித் துறையினர் கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தனர். அதில் சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
பதில் கடிதம்
இந்நிலையில் சசிகலா, இளவரசியிடம் நீதிமன்ற அனுமதியில்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிறைத் துறையினர் வருமான வரித் துறையினருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சசிகலாவும், இளவரசியும் குற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் நீதிமன்ற அனுமதி வேண்டும். கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே வருமான வரித்த துறையின் விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கி தர முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வருமான வரித் துறையினர் அனுமதி வாங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.