ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க 3வது நாளாக போராட்டம்: 'ரோபோ' மணிகண்டன் வருகை
பாகல்கோட்டை: திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்தாலும், மீட்பு பணியில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம்பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தஹட்டி. இவருக்கு திம்மண்ணா என்ற ஆறு வயது மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்றுமுன்தினம்) மதியம் ஹனுமந்தகட்டிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்கு உறவுக்கார சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்றான் திம்மண்ணா.
அங்கு சுமார் 300 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு தண்ணீர் வராததால் சாக்குப்பையால் மூடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின் வாய் பகுதியை திறந்து பார்த்துள்ளான் திம்மண்ணா. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்துவிட்டான்.
மீட்பு பணி துவக்கம்
இதைப்பார்த்த, உடன் வந்த உறவுக்கார சிறுவன் கொடுத்த தகவலின்பேரில், ஊர்க்காரர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கின.
சிசிடிவி காமிராக்கள்
குழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. இரவு பகல் பாராமல் மீட்பு பணி தொடர்ந்து கொண்டுள்ளது. கிணற்றுக்குள் சிசிடிவி காமிராவை நுழைத்து, சிறுவன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளம் தோண்டி மீட்பு
மண்டியாவை சேர்ந்த மஞ்சேகவுடா என்பவர் ரோபோ உதவியுடன் சிறுவனை மீட்க நடத்திய முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போர்வெல் அருகே மற்றொரு ஆழமான கிணறு தோண்டி அதன் வாயிலாக சிறுவனை மீட்கும் முயற்சியில் மட்டும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். புனேயில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆக்சிஜன் குழாய் நீட்டிப்பு
நேற்றுமுன்தினம் மாலையில் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்த சிறுவன், கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தற்போது 160வது அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆக்ஜிஜன் குழாய் 185 அடி ஆழம் வரை நீட்டிக்கப்பட்டு சுவாசத்துக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்கு மேலே மணல்
சிறுவனுக்கும், மீட்பு குழுவினருக்கும் நடுவே அதாவது சுமார் 150வது அடியில் கல் மற்றும் மண் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த கல் அல்லது மண் கீழே விழுந்தால் சிறுவனின் தலையில் ரத்த காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அதிர்ச்சியில் சிறுவன் மேலும், கீழே ஆழமான பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே கல் மற்றும் மண்ணை லாவகமாக எடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மணிகண்டன் வருகை
இதனிடையே, மதுரையை சேர்ந்த ரோபோ விஞ்ஞானி மணிகண்டன் இன்று மதியம் பாகல்கோட்டை வந்தடைகிறார். அவர் ரோபோ மூலம் மீட்பு பணியில் ஈடுபட உள்ளார். மேலும், போர்வெல் அருகே சுரங்க பாதை தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக இதுவரை 80 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் பல அடி தோண்ட வேண்டியுள்ளதால் மீட்பு பணி மேலும் மூன்று நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.