கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்பதில் சிக்கல்!
பாகல்கோட்டை: திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் 160 அடி ஆழத்தில் சென்று சிக்கிக்கொண்டுள்ளதாலும், கல் இடையில் இருப்பதாலும் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது.
கடந்த ஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து 46 மணி நேரத்துக்கு பிறகு உயிரிழந்தாள்.
இந்நிலையில், பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அன்று மதியம், அக்கிராமத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளான்.
ஹனுமந்தஹட்டி என்பவர் இந்த ஆழ்துளை கிணற்றை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அதை அப்படியே திறந்துவிட்டிருந்தார். நேற்று மதியம் தனது உறவுக்கார பையனுடன் அப்பகுதியில் ஓடி சென்ற திம்மண்ணா கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிட்டான்.
மீட்பு பணி துவக்கம்
இதைப்பார்த்த, உடன் வந்த உறவுக்கார சிறுவன் கொடுத்த தகவலின்பேரில், ஊர்க்காரர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கின.
சிசிடிவி காமிராக்கள்
குழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. நேற்று இரவு, விடிய விடிய குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்தது. கிணற்றுக்குள் சிசிடிவி காமிராவை நுழைத்து, சிறுவன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி காமிராவில் சிறுவனின் விரல்கள் தென்பட்டன.
பள்ளம் தோண்டி மீட்பு
ரோபோ உதவியுடன் சிறுவனை மீட்க நடந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போர்வெல் அருகே மற்றொரு ஆழமான கிணறு தோண்டி அதன் வாயிலாக சிறுவனை மீட்கும் முயற்சியில் மட்டும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். புனேயில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆக்சிஜன் குழாய் நீட்டிப்பு
நேற்று மாலையில் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்த சிறுவன், கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தற்போது 160வது அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆக்ஜிஜன் குழாய் 185 அடி ஆழம் வரை நீட்டிக்கப்பட்டு சுவாசத்துக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்கு மேலே கல்
சிறுவனுக்கும், மீட்பு குழுவினருக்கும் நடுவே அதாவது சுமார் 150வது அடியில் ஒரு கல் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த கல் கீழே விழுந்தால் சிறுவனின் தலையில் ரத்த காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி கல் விழுந்த அதிர்ச்சியில் சிறுவன் மேலும், கீழே ஆழமான பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே கல்லை லாவகமாக எடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் 24 மணி நேரம் கழிந்தபிறகும் சிறுவனை மீட்பதில் சிக்கல் நிலவிவருகிறது.
சிறப்பு பிரார்த்தனைகள்
இதனிடையே, திம்மண்ணா உயிரோடு மீண்டு வர வேண்டும் என்று வேண்டி, கர்நாடகாவின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. பள்ளிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.