ரூ.12 கோடிப்பே... சொத்துக்குவிப்பு வழக்கு செலவை தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகா
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.12.04 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பெங்களூர்: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்தியதால் கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி செலவாகியுள்ளது. இந்த தொகையை தமிழகம் திருப்பித்தர கர்நாடகா கோரிக்கைவிடுத்துள்ளது.
20 வருடங்களுக்கும் மேலாக குற்றவாளிகள் தரப்பால் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் பெங்களூருக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதன்பிறகு கர்நாடக அரசுதான் வழக்கு செலவீனங்களை ஏற்க வேண்டியதாயிற்று. கோர்ட் ஹால் அமைப்பது, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சம்பளம், நீதிபதிகளுக்கான சம்பளம், வழக்கறிஞர்கள் சம்பளம் என பல வகைகளிலும் இந்த வழக்கால் கர்நாடகாவுக்கு செலவீனம் அதிகரித்தது.
குற்றவாளிகள்
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அங்கு நடைபெற்ற இந்த வழக்கில் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ல், விசாரணை முடிந்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்தது.
சுப்ரீம் கோர்ட்
இதனையடுத்து, சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. குன்ஹா வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.12.04 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கடிதம் எழுதிய அமைச்சர்
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இதற்கான கடிதத்தை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். 2015ம் ஆண்டே சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளுக்காக ஈடு தொகையை தருமாறு தமிழக தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அதற்கு எந்தவொரு பதிலும் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது கர்நாடக அரசு.
செலவு விவரம்
வழக்கு நடத்த செய்யப்பட்ட செலவீனங்களின் விவரம் இதுதான்: பல்வேறு துறைகளுக்கான செலவீனம்-ரூ.3.78 கோடி. சிட்டி சிவில் கோர்ட்டுக்கான செலவு ரூ.2.86 கோடி. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது செலவிட்ட தொகை ரூ.4.68 கோடி. காவல்துறை பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை ரூ.70.33 லட்சம்.