சொத்துக்குவிப்பு வழக்கிற்கு கை காசை செலவு செய்த கர்நாடகா! தமிழகத்திடம் திருப்பி கேட்கிறது
பெங்களூர்: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்தியதால் கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளது.
20 வருடங்களுக்கும் மேலாக குற்றவாளிகள் தரப்பால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு 2003ல் பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் பெங்களூருக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதன்பிறகு கர்நாடக அரசுதான் வழக்கு செலவீனங்களை ஏற்க வேண்டியதாயிற்று. கோர்ட் ஹால் அமைப்பது, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சம்பளம், நீதிபதிகளுக்கான சம்பளம், வழக்கறிஞர்கள் சம்பளம் என பல வகைகளிலும் இந்த வழக்கால் கர்நாடகாவுக்கு செலவீனம் அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நிலவரப்படி, ரூ.5 கோடிவரை செலவாகியிருந்தது. சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்ற அப்பீல் விசாரணையின்போது செலவீனம் மேலும் கூடியுள்ளதாம். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், செலவீனங்களை கணக்கிட்டு வருகிறோம். விரைவில் இதற்கான தொகையை தமிழகத்திடம் கேட்டுபெறுவோம் என்றார்.