தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
மிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூரு: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
இந்தி அல்லாத இந்திக்கு முக்கியத்துவம் அளிக்காத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளிலும் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகள் அவற்றை கறுப்பு மையால் அழித்தன.
இந்நிலையில் கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான போராட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. கர்நாடக மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில் இந்தியில் எழுதப்பட்ட பெயரை கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் கர்நாடக ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் கறுப்பு மையால் அழித்தனர்.
இந்தி திணிப்பை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் பெங்களூரு ரயில் நிலையங்களில் இந்தியில் பெயர் எழுதுவதை மெட்ரோ நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் பெங்களூரு ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயரில் இருந்த ஆங்கில எழுத்துகளை கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.