கன்னட அமைப்புகளின் கொந்தளிப்பு.. "கருப்பு 91" திரும்புமா?... பீதியில் கர்நாடகத் தமிழர்கள்! #cauvery
பெங்களூரு: காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகத்தில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் தற்போது பல்வேறு கன்னட அமைப்புகளும் இணைந்துள்ளன. இதனால் போராட்டம் வேறு ரூபத்திற்கு மாறி வருகிறது. வன்முறையும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் குறிப்பாக பெங்களூர் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழர்களின் உயிர், உடமைக்கு ஆபத்து நிலவுவதாக அச்சம் நிலவுகிறது. தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவை இன்று தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து தமிழர்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் ஜி. தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவைச் சந்தித்து கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகர், மாண்டியா, கோலார் தங்கச் சுரங்கம் ஆகிய நகரங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தோம்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் முடிவுக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். இதை அமைச்சரிடம் தெரிவித்தோம். மாநிலம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் என்று தாமோதரன் கூறியுள்ளார்.
மறக்க முடியாத 1991 கலவரம்
கடந்த 1991ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக பெங்களூரு, மைசூரு நகரங்களில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக விரட்டப்பட்ட அவலத்தை நாடு பார்த்தது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.