மதச்சார்பற்ற கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பித்த கர்நாடகா தேர்தல் முடிவுகள்!
கர்நாடகா தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு பாடத்தை கற்பித்துள்ளது.
Recommended Video
பெங்களூரு: பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கர்நாடகா தேர்தல் முடிவுகள் மிக சரியான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரமாண்ட கூட்டணி அவசியம் என்பது மதச்சார்பற்ற கொள்கையாளர்களின் குரல். ஆனால் காங்கிரஸ் தலைமை இதைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்வது இல்லை.
திரிபுரா தேர்தல் முடிவுகள் வெளியான போதே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்த தமது முயற்சிகளை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது; அதுதான் படுதோல்விக்குக் காரணம் என சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையிலும் அதேபோல் கருத்தைத் தெரிவித்துள்ளார் மமதா. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது எனக் குறிப்பிட்டிருக்கிறார் மமதா பானர்ஜி.
உண்மைதான். மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக இந்த அளவுக்கு தனிப்பெரும்பான்மை கட்சியாக வந்திருக்கவே முடியாது. ஆனால் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான தேவகவுடாவை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தேர்தல் களத்தில் இழிவுபடுத்தி பேசினர்.
இது ஜேடிஎஸ்-ன் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா சமூகத்தை கொந்தளிக்க வைத்தது. அவர்களது பெரும் கோபம் காங்கிரஸ் மீது பாய்ந்தது. இதனால் ஒக்கலிக சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பழைய மைசூரு பிராந்தியத்தில் காங்கிரஸ் சில இடங்களை இழக்க நேரிட்டது. இதுவும் பாஜகவுக்கு ஆதாயமாகிப் போனது.
சித்தராமையாவின் தனிப்பட்ட விரோதம் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இதைத்தவிர்த்து ஜேடிஎஸ்-உடன் காங்கிரஸ் இணக்கமாக சுமூகமான தேர்தல் உடன்பாடு செய்திருந்தால் பாஜகவின் எண்ணிக்கை நிச்சயம் டபுள் டிஜிட்டில்தான் இருந்திருக்கும்.
திரிபுராவிலும் கர்நாடகாவிலும் மாநில கட்சிகளை அல்லது மதச்சார்பற்ற சக்திகளை மதிக்காமல் நடந்து கொண்டதன் விளைவை அனுபவித்திருக்கிறது காங்கிரஸ். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களிலாவது சக மதச்சார்பற்ற சக்திகளை அரவணைத்துச் செல்ல முன்வருமா காங்கிரஸ்? என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கேள்வி.