தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முந்திய கர்நாடகா - பிந்திய தமிழகம்
2017ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு 3.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதில் 0.8 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள அமைதியான மாநிலம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தொழில் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அரசு அனுமதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் மின்தடை அறவே கிடையாது. வெளிப்படையான அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பின் தங்கியுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2017ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு 3.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா முதலிடம்
இந்திய மாநிலங்களில் 1.52 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்று கர்நாடக முதலிடத்தில் இருக்கிறது. 79,068 கோடி ரூபாய் முதலீட்டை பெற்று குஜராத் 2ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. மராட்டிய மாநிலம் 2017ஆம் ஆண்டில் 48,581 கோடி ரூபாயை முதலீட்டாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகமோ 3,131 கோடி ரூபாயை மட்டுமே பெற்றிருக்கிறது.
தொழில் முதலீடு சரிவு
தமிழகத்தில் 1 சதவிகிதத்திற்கு கீழ் மட்டுமே, அதாவது 0.8 விழுக்காடு மட்டுமே தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்ற தன்மை காரணமாகவே தொழில் முதலீட்டின் விகிதம் சரிந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பேச்சு
ஜெயின் சமூகத்தினர் நடத்திய விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015ஆம் ஆண்டு நடந்தது. அதில் 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். முதலீட்டாளர்கள் வருவார்களா?