கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங். அமோக முன்னிலை.. 2வது இடத்தில் பாஜக
கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.
105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது. தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இந்த 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.
105 நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமாக 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
உள்ளாட்சி அமைப்பு வாரியாக 29 சிட்டி கவுன்சிலில் பாஜக 10லும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மஜத 3 இடத்திலும் வென்றுள்ளது. 53 முனிசிபாலிட்டியில் பாஜக 12லும், காங்கிரஸ் 19 இடங்களிலும், மஜத 8 இடத்திலும் வென்றுள்ளது. 20 டவுன் பஞ்சாயத்தில் பாஜக 7லும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மஜத 2 இடத்திலும் வென்றுள்ளது.
வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியே காலையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும் இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் இதிலும் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாலைக்குள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.