கர்நாடக சட்டசபைத் தேர்தல் வெற்றி தென்னிந்தியாவில் காலூன்ற பாஜகவிற்கு உதவும் : அமித் ஷா
எதிர்க்கட்சிகளில் தகுதியான பிரதமர் வேட்பாளரே இல்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : எதிர்க்கட்சியில் தகுதியான பிரதமர் வேட்பாளரே கிடையாது. எனவே, வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான பரபரப்பான பிரச்சாரத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக தலைவர் அமித் ஷா பெங்களூருவில் தங்கி தீவிரமாக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வருகிறார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் அமித் ஷா பேசுகையில், கர்நாடகாவில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தல்
மேலும், கர்நாடகாவில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற வலுவான அடித்தளமாக இது அமையும். கர்நாடகத் தேர்தலில், முடிவுகள் இழுபறியாக அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பது உண்மை அல்ல. திரிபுரா, உத்தர்காண்ட், மணிப்பூர், குஜராத் சட்டசபைத் தேர்தல்களிலும் இதே போன்ற முடிவுகள் வந்ததை பாஜக பொய்யாக்கி, அங்கு வெற்றி பெற்று காட்டியுள்ளது.
தனிப்பெரும்பான்மை வெற்றி
அந்த நிலை கர்நாடகாவிலும் ஏற்படும். காங்கிரஸ் அரசு இங்கு தோல்வி அடைந்து இருக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. எனவே, பாஜகவை மாற்றாக மக்கள் பார்க்கிறார்கள். பிரதமர் மோடிக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு உள்ளது. கர்நாடகாவில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இங்கு நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.
கர்நாடக காங்கிரஸ்
கர்நாடக காங்கிரஸ் சாதி ரீதியிலான அரசியலை முன்வைத்து செயல்படுகிறது. அதே போல, உத்தரபிரதேசத்திலும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் சாதி ரீதியிலான அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஆனால். பாஜக அனைத்து இனை மக்களையும் ஒருங்கிணைத்து மொத்த வளர்சிக்காகவும் பாடுபடுகிறது. பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை சாதாரணமானது.
இடைத்தேர்தல் முடிவுகள்
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணி போல வருகிற 2019ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைப்போம். திரிபுரா, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா, பீகாரில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. வடகிழக்கிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் எங்களை பலவீனப்படுத்தாது.
2019 நாடாளுமன்ற தேர்தல்
எதிர்க்கட்சியில் இருந்து பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று யாரும் இதுவரை இல்லை. அவர்களே அந்த விஷயத்தில் குழம்பிக்கிடக்கிறார்கள். மோடி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் மோடி பிரதமர் ஆவதையே நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அதை 2019ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.