காவிரிக்கும், காண்டம் ஊழலுக்கும் என்ன தொடர்பு? கர்நாடகா கதகதக்க இதுதான் காரணமா?
பெங்களூர்: ரூ.500 கோடி மதிப்புள்ள ஊழலை மறைக்கவே காவிரி விஷயத்தை கர்நாடக அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நிருபர்களுக்கு சில தினங்கள் முன்பு பேட்டியளித்த கர்நாடக பாஜக பிரமுகர் ரமேஷ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆணுறை வழங்குவதற்கான நிதியில் ரூ.500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் முதல்வர் சித்தராமையா, சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பங்கு இருக்கிறது எனவும் கூறினார்..
கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக தலைவராக இருப்பவர் சித்தராமையா என்பதால் இந்த சந்தேகம் வலுக்க தொடங்கியது.
இந்த அமைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி செய்வதோடு, யுனிசெஃப், பில்கேட்ஸ் அறக்கட்டளை போன்றவற்றில் இருந்தும் நிறைய நிதி வந்திருக்கிறது. அது, அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக ரமேஷ் குற்றம்சாட்டினார்.
82,000 பெண்கள், 29,000 ஓரினச் சேர்க்கையாளர்கள், 1,700 திருநங்கைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்ததாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்களைச் சட்டரீதியாக அனுமதிக்காதபோது, கர்நாடக அரசு அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறி இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
அதேபோல, அரசு நிறுவனத்தில் இருந்து ஆணுறைகளை வாங்காமல் தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆணுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதிலும் ஊழல் நடந்திருக்கிறது என்கிறார் ரமேஷ்.
தற்போதைய உணவுத் துறை அமைச்சராக இருக்கும் யு.டி.காதர் இந்தக் குற்றசாட்டுகளை மறுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான், சுப்ரீம்கோர்ட் கூறியும், காவிரி விஷயத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காண்டம் விஷயம், காவிரி விவகாரத்தால் மக்கள் மன்றத்தில் எடுபடாமலே போய்விட்டது.