கூட்டணிக்கு ஓகே.. ஆனால் சித்தராமையா வேண்டாம்.. மீண்டும் கிங் மேக்கராகும் ஜேடிஎஸ்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வழி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வழி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்தராமையா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின்
கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற எல்லாவற்றிலும் காங்கிரஸ், பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜேடிஎஸ் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்களுக்கே, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
யாருக்கு வாய்ப்பு
தற்போது ஜேடிஎஸ்கட்சிக்கு இரண்டு வாய்ப்புள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் பதவியை பெறுவது. பாஜக கண்டிப்பாக முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காது. அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணியை தொடரலாம். ஆனால் ஜேடிஎஸ் கட்சியின் கொள்கைக்கு அது முரணாக இருக்கும். அதேபோல் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி சென்ற முறை போல பிரகாசமாக இல்லை. தேசிய அளவில் மூன்றாம் அணிக்கான ரேஸில் ஜேடிஎஸ்கட்சியும் இருப்பதால், மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பிரச்சனை
இரண்டாவதாக ஜேடிஎஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் பெரிய பிரச்சனை இல்லை. ஏற்கனவே இரண்டு கட்சிகளும் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளனர். ஆனால் பிரச்சனை சித்தராமையா மட்டும்தான். அவரை முதல்வராக ஜேடிஎஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியிலும் சிலர் சித்தராமையா முதல்வராவதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைத்து வேறு முதல்வரை அறிவிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக ஜேடிஎஸ்ஸின் குமாரசாமிக்கு முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது
முன்னோட்டம்
இந்த நிலையில் தற்போது, இந்த கூட்டணி கணக்கு எப்படி செல்லும் என்று கொஞ்சம் தகவல் கசிந்துள்ளது. அதன்படி கர்நாடகத்தில் பாஜகவுக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜேடிஎஸ் கூறியுள்ளது. எப்போதும் மதச்சார்பற்றுதான் இருப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எங்களிடம் ஆதரவு கோரினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றுள்ளனர். ஜேடிஎஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் அலி இந்த கூட்டணி முடிவில் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் தென்னிந்தியாவை பிடிக்கும் பாஜகவின் கனவில் கூட தாமரை மலராமல் போய் உள்ளது.