அடுத்து கன்பார்மா பையன் தான்... நம்பிக்கையோடு 15 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த கர்நாடக ‘அம்மா’
பெங்களூரு: ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில், கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்தடுத்து 15 பெண்களைப் பெற்றெடுத்துள்ளார்.
அந்தக் காலத்தில் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்ற ஆசிர்வாதத்தை உண்மையாக்கி, பத்துக்கும் மேற்கண்ட குழந்தைகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால், தற்போது நிலைமையே வேறு. நாம் இருவர் நமக்கு ஒருவர் என வாழ்ந்து வருகிறார்கள்.
அதேபோல், பெண் சிசுக் கொலை நிலையும் மாரி, கடைசிக் காலத்தில் மகள் தான் அரவணைப்பாள் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர்.
ஆனால், இன்னும் சிலர் வாரிசு என்றால் அது ஆண் குழந்தை தான் என உறுதிபட வாழ்ந்து வருகிறார்கள் என்பது இந்த சீத்தானி பாய் ஒரு உதாரணம்.
சீத்தானி பாய்...
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் சின்டோல் தண்டா என்ற இடத்தை சேர்ந்தவர் சீத்தானி பாய். இவருக்கு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க வேண்டும் என்பது தான் லட்சியம். ஆனால், அடுத்தடுத்து இவருக்கு பிறந்ததோ பெண் குழந்தைகள்.
ஆண்டுக்கு ஒன்று...
கடந்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு குழந்தை என 15 மகள்களைப் பெற்றெடுத்துள்ளார் சீத்தானி. கடந்த 11ம் தேதி சீத்தானிக்கு 15வது பெண் குழந்தை பிறந்தது.
.
15 பெண் குழந்தைகள்...
மூன்றரை கிலோ எடையுடன் அந்த குழந்தையும் நலமுடன் இருக்கிறது. 15 பெண் குழந்தைகளில் 6 குழந்தைகள் இறந்துவிட 9 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளன.
கடைசிக் குழந்தை...
சீத்தானி முதல் 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பொருளாதார சிக்கல் காரணமாக கடைசிக் குழந்தையை வளர்க்க முடியாது என தன்னார்வ அமைப்பிடம் அவர் ஒப்படைத்து இருக்கிறார்.
குடும்பக் கட்டுப்பாடு...
இது பற்றி தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரிகள் சீத்தானி பாய் வீட்டுக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து, அவருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அதோடு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படியும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கணவருடன் பேசி...
இது தொடர்பாக மும்பையில் இருக்கம் தனது கணவரிடம் பேசி இறுதி முடிவு எடுக்க போவதாக கூறியிருக்கிறார் சீத்தானி.
ஒருவேளை பேரிலேயே பாய் வைத்திருப்பதால் ஆண் குழந்தை ஆசை உள்ளதோ என்னவோ...