இஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தாமல் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் அமைத்த கர்நாடகா! 2000 மெகாவாட் ரெடி
Recommended Video
பெங்களூர்: உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (Solar Park) கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம், பாவகடா என்ற இடத்தில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவால் துவக்கி வைக்கப்பட்டது.
சூரிய மின்சக்தி பூங்காவால், வறட்சி பாதித்த தும்கூர் மாவட்டம் வளர்ச்சியடையும் என கூறினார் சித்தராமையா. மொத்தம் 13000 ஏக்கரில், 2000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து சோலார் பார்க் துவக்கப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த இடமாக இருந்தாலும், இத்திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து ஒரு இஞ்ச் நிலம் கூட வாங்கப்படவில்லை.
வாடகை கொடுக்கிறார்கள்
அதேநேரம், சோலார் பார்க் அமைந்துள்ள இடங்களை சுமார் 2300 விவசாயிகளிடமிருந்து வாடகைக்குதான் பெற்றுள்ளது அரசு. இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.21,000 வாடகை தொகையாக வழங்கப்படுகிறது. இது அப்பகுதி வானம் பார்த்த பூமியை கொண்ட விவசாயிகளுக்கு நல்ல தொகைதான். மேலும் 2 வருடங்களுக்கு ஒருமுறை, வாடகை தொகையில் 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியோடு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
குறுகிய காலத்தில் அமல்
வெறும் 2 வருடங்களில் இத்திட்டம் தொடங்கி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று சூரிய மின்சக்தி பூங்காவை மாநிலத்திற்கு அர்ப்பணித்தார். மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெயச்சந்திரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பரந்து விரிந்த பூங்கா
சோலார் பூங்காவில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.3.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு 'சக்தி ஸ்தலா' என அரசு பெயர் சூட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா என்ற அடைமொழிக்கு ஏற்ப சுமார் 5 கிராமங்களில் பரந்து விரிந்துள்ளது இந்த சூரிய மின்சக்தி பூங்கா.
மின்சார உற்பத்தியில் டாப்
2012-13ல் 14,030 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த கர்நாடகா, இந்த சூரிய மின்சக்தி பூங்காவின் உதவி உள்ளிட்ட மேலும் பல திட்டங்களால் 23,379 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக முன்னேறியுள்ளது.