கர்நாடக மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் காங். முதலிடம்: 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தமுள்ள 30 இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக 7 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடகாவில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. அதில் 1083 மாவட்ட பஞ்சாயத்து தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 1080 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாலையில் முழு ரிசல்ட் வெளியானது. ஆளும் காங்கிரஸ் 10 மாவட்டங்களையும், பாஜக 7 மாவட்டங்களையும், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் 2 மாவட்டங்களையும் வென்றுள்ளது. எஞ்சிய 11 மாவட்டங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே அங்கு கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது.
கடந்த தேர்தலின்போது பாஜக 12, காங்கிரஸ் 7, ம.ஜ.த 3 மாவட்டங்களை வெற்றிகண்டிருந்தனர். எனவே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதாயம் 3 மாவட்டங்களாகும். பாஜகவுக்கு இழப்பு 5 மாவட்டங்கள். ம.ஜ.த 1 மாவட்டத்தை இழந்துள்ளது.