பத்மாவத் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் ஏதும் இல்லை.. போராட்டத்தை வாபஸ் பெற்றது கர்னி சேனா
பத்மாவத் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் ஏதும் இல்லாததால் தங்கள் போராட்டத்தை கர்னி சேனா அமைப்பினர் வாபஸ் பெற்றனர்.
ஜெய்ப்பூர்: ராஜபுத்திர வம்சத்தினரை பெருமைப்படுத்தும் விதமாக பத்மாவத் படம் அமைந்துள்ளது என்பதால் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக கர்னி சேனா அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சஞ்சய் லீலா பஞ்சாலியின் படமான பத்மாவத் படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்களையும் ராணியையும் தவறாக சித்தரிப்பதாக எதிர்ப்பு எழுந்தது.
இதனால் கடந்த டிசம்பர் 1-ஆ்ம தேதி நாடு முழுவதும் திரையிட முடிவு செய்திருந்த நிலையில் இந்த படத்தை திரையிட கூடாது என்று வடமாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு வலுத்தது. பத்மாவத் படத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. படத்தை வெளியிடவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
கர்னி சேனா அமைப்பினர் தாக்குதல்
கடந்த 25-ஆம் தேதி முன்பு இந்த திரைப்படம் பலத்த பாதுகாப்புடன் நாடு முழுவதும் வெளியானது. எனினும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சினிமா தியேட்டர் உரிமையாளர்களே கர்னி சேனா அமைப்பினரின் போராட்டத்தால் இந்த படத்தை வெளியிடவில்லை. கர்னி சேனா அமைப்பினர் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளி குழந்தைகள் செல்லும் வேன் என்றும் பாராமல் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
புண்படும் காட்சிகள் இல்லை
இந்த சூழ்நிலையில் கர்னி சேனா அமைப்பினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் எங்கள் அமைப்பினர் சிலர் பத்வாமத் திரைப்படத்தை மும்பையில் பார்த்தனர். அப்போது அதில் திரைப்படத்தில் எங்கள் மனம் புண்படும்படியான காட்சிகள் ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
தவறு இல்லை
ராஜபுத்திர வம்சத்தினரை ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இந்த படம் அமைந்துள்ளது. இதில் கில்ஜிக்கும் பத்மாவதிக்கும் இடையே நடைபெறும் காட்சிகள் தவறாக சித்தரிக்கப்படவில்லை.
போராட்டம் வாபஸ்
மொத்தத்தில் இந்த படம் ராஜபுத்திர வம்சத்தினரின் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதனால் எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்கிறோம். மேலும் இந்த திரைப்படம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் திரையிடுவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அந்த அறிக்கையில் கர்னி சேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.