ஓட்டு அரசியலுக்காக பாஜக அரசுகளால் வளர்த்து விடப்படும் 'கார்னி சேனா' பயங்கரவாத கும்பல்!
வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக அரசுகளால் கர்னி சேனா கும்பல் வளர்த்துவிடப்படுகிறது.
டெல்லி: ஓட்டு அரசியலுக்காக பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் திட்டமிட்டே கார்னி சேனா பயங்கரவாத கும்பல் வளர்க்கப்படுகிறது. இதன்விளைவாகத்தான் வட இந்தியா போர்க்களமாகி இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதைப் போல ஆதிக்க ஜாதியினரும் இடஒதுக்கீடு கேட்டு கிளர்ச்சியில் இறங்குவதும் அதை அரசுகள் ஆதரிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. குஜராத்தில் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த பட்டேல்கள், எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும், இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையையே ஒழி என முழக்கம் வைத்தனர்.
வட இந்தியாவிலும்...
காலப்போக்கில் பட்டேல்கள் சமூகம், பாஜகவுக்கு எதிராகவே திரும்பியது என்பது அண்மைய நிகழ்வு. இதேபோல் வட இந்தியாவில் ஆதிக்க ஜாதியினராகிய ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வைசியர்களுக்கும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோரி தொடங்கப்பட்டது கார்னி சேனா. இப்போது கார்னி சேனா 3 அமைப்புகளாக சிதறி நிற்கிறது.
பாஜக ஆதரவு
ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் ஜாட்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் காங்கிரஸின் வாக்கு வங்கி. ராஜபுத்திரர்கள், பிராமணர்கள் பாஜகவின் வாக்கு வங்கி. இப்போது கார்னி சேனாவை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் ஆதிக்க ஜாதி வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் கார்னி சேனாவின் பயங்கரவாத செயல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
குழந்தைகள் உயிரை காவு வாங்க முயற்சி
பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக நாக்கை அறுப்போம்; உயிரோடு எரிப்போம், புதைப்போம் என்றெல்லாம் கார்னி சேனா கும்பல் பேசியபோதே நையப்புடைத்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசுகள் கண்டுகொள்ளாமல் வளர்த்துவிட்டதால் பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் குடிக்க துணிந்திருக்கிறது இந்த பயங்கரவாத கும்பல்.
கை கோர்த்த இந்துத்துவா கோஷ்டிகள்
கார்னி சேனா கும்பல் காவி கொடிகளுடன் கத்திகளோடும் லத்திகளோடும் வீதிகளில் வலம் வர பாஜக அரசுகள் தாராள அனுமதி கொடுத்து தேசம் எங்கும் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளன. கார்னி சேனா என்பது ராஜபுத்திரர்களின் அமைப்பு மட்டுமே அல்ல... இந்துத்துவா வன்முறை கும்பல்கள் நிறத்தை மாற்றிக் கொள்வது போலத்தான் கார்னி சேனாவையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் இந்துத்துவா மகளிர் அமைப்பு ஒன்றின் 7 பேர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பாஜக அரசுகள் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்ததால்தான் இந்த கார்னி சேனா கும்பல் பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.