வெளிநாடு போகணும்... சுப்ரீம் கோர்ட்டில் பெர்மிசன் கேட்ட கார்த்தி சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உள்ளார் கார்த்தி சிதம்பரம்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி உள்ள நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் பல முறைக்கேடுகள் நடந்து இருப்பதாகவும், இந்த வழக்கு சார்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் நபராக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனையடுத்து, தான் தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டி இருப்பதால் இந்த வழக்கில் இருந்து நேரில் ஆஜராக தனக்கு விளக்கு அளித்தும், ஜனவரி 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை வெளிநாடு செல்லவும் அனுமதி அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வருகிற 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட உள்ளது.