ஸ்ரீவைகுண்டத்தில் தடுப்பணை கட்றீங்களா இல்லை உண்ணாவிரதம் இருக்கட்டா.. கேட்கிறார் கார்த்திக்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் திருட்டை தடுக்க தடுப்பணை அமைக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கோரி நாடாளுமன்ற மக்கள் கட்சியின் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கார்த்திக், "ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி நத்தை வேகத்தில் நடக்கிறது. மழைக்காலத்திற்கு பின்னர் மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
மணல் கொள்ளை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரிந்தே நடக்கிறது. மக்கள் வாழ்விலும் விவசாயிகள் வாழ்விலும் விளையாடாதீர்கள். தற்போது தமிழகம் குடிக்கும் தண்ணீர் பிரச்னையிலும் டாஸ்மாக் தண்ணீர் பிரச்னையிலும் சிக்கித்தவிக்கிறது. "குடி" யை கெடுத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வேண்டாம்.
எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் போனதால் நடிகர் சங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. இது அனைவருக்கும் பொருந்தும். ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும்போது கிடைக்கும் மணலை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
ஆற்றுக்கரைகளை பலப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும். இந்த கோரிக்கைகளை 2 வார காலத்திற்குள் நிறைவேற்றவில்லை எனில் எனது தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.