நான் இந்துஸ்தான் 'லீவர்' கிடையாது.. பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் ரெடி: கார்த்தி சிதம்பரம் அதிரடி வாதம்
டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முகாந்திரமே இல்லை என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், அவர் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி வாதம் முன்வைத்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றதால்தான் அவரை கைது செய்ததாக சிபிஐ தரப்பு தனது வாதத்தில் கூறியது.
இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி தனது வாதத்தில் கூறியதாவது:
கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. இதுவரை மொத்தம், 22 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு வினோதமானது. அவர் கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. கார்த்தி சிதம்பரம் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு (Hindustan LEAVER) தப்பி ஓடுபவர் இல்லை. இந்தியாவுக்கு திரும்புபவர். வழக்கின்போது மூன்று முறை வெளிநாடு சென்று திரும்பியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதுதான் சிபிஐக்கு பிரச்சினை என்றால், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.
நீரவ் மோடி, மல்லையா உள்ளிட்ட பலரும் இந்தியாவை விட்டு தப்பியோடியதை குறிப்பிட்டு இந்துஸ்தான் லீவர் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதிட்டது கவனிக்கத்தக்கது.