ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் ப. சிதம்பரத்திற்கும் பங்கு? வெளியான புது தகவல்கள்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையில், இதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமாக இருந்தது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் . கடந்த 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு 1 நாள் சிபிஐ காவல் அளித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆங்கில ஊடகங்கள் பலவற்றிலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிறையிலுள்ள இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின்போது, இந்த மோசடியில் ப.சிதம்பரத்திற்கு தொடர்புள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகவும், அந்த ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும், அவை செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், டெல்லி நார்த் பிளாக்கில், சிதம்பரத்தை, தாங்கள் சந்தித்து, வெளிநாட்டு நிதியை பெற உதவி கோரியதாகவும், அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரம் தொழிலுக்கு 'உதவுமாறு' தங்களிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து டெல்லியிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கார்த்தி சிதம்பரத்தை தாங்கள் சந்தித்ததாகவும், அவர் 1 மில்லியன் டாலரை கேட்டதாகவும், அந்த தொகையை செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்களுக்கு செலுத்த கூறியதாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனராம். இதை டைம்ஸ் நவ், ரீபப்ளிக் டிவி போன்ற ஆங்கில டிவி சானல்கள் இன்று வெளியிட்டன.
சிதம்பரத்தை கைது செய்ய சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கைவிடுத்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.