லஞ்ச மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது எப்.ஐ.ஆர்! எந்த நேரத்திலும் கைது?
ஐஎன்எக்ஸிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: ஊடகம் ஒன்றுக்கு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின்பேரில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், கார்த்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர், இந்திராணி முகர்ஜியின் நிறுவனமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது.
இந்த மீடியா நிறுவனத்திற்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்துக் காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை பெற்றுத்தர அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக ரூ.90 லட்சம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.
இந்த முறைகேடு தொடர்பாகத்தான் இன்று சிபிஐ சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றது. கார்த்தி சிதம்பரத்தின் பெயர் ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அடிபட்டது. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கார்த்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திராணி, கார்த்தி சிதம்பரம் இயக்குநராக உள்ள செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம், பத்மா விஸ்வநாதனின், அட்வான்டேஜ் ஸ்டேர்டஜிக் நிறுவனம், நிதித்துறையின் பெயர் தெரியாத நபர்கள் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பபட்டுள்ளது.
இதனால் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. கைது செய்தால் அவரை திகார் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ரெய்டை கண்டித்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து தமிழக காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.