3-வது சம்மனுக்கும் பதிலில்லை .. கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்? #kartichidambaram
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வரும் ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் (2004-07 ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்தவர்) சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடுடன் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் பேர விவகாரத்தில், மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக உள்ள செஸ் குளோபல் அட்வைசரி சர்வீசஸ், அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதிரடி சோதனை
இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செஸ் குளோபல் நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது. அவரது நண்பர்கள் சிலரும் இந்த நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளதாகக் கூறப்பட்டது.
ஒத்துழைப்பதாக கூறினார்
இந்த விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம், விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் இரு இயக்குநர்களுக்கு அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் சம்மன்களை அனுப்பியது. அந்த நிறுவனத்திடம் இருந்து ஏர்செல் டெலிவெஞ்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.26 லட்சம் அனுப்பப்பட்டதை அமலாக்கத் துறை தனது விசாரணையில் கண்டறிந்தது. ஏர்செல்-மேக்சிஸ் பேர முறைகேட்டை அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய இரு அமைப்புகளுமே விசாரித்து வருகின்றன.
சம்மன்
இவ்வழக்கில் பல்வேறு நாடுகள் வழியாகப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே, இது தொடர்பாக மேலும் பல தகவல்களைப் பெறுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அமலாக்கத் துறை தொடர்பில் உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது.
மூன்று சம்மன்கள்
புதன்கிழமையான நேற்று டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தியை ஆஜராகுமாறு கூறி 3வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 3 சம்மன்களையும், கார்த்தி சிதம்பரம், துச்சமென கருதி செல்லவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்காத கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாமா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், முதலில் நான் என்ன தவறு செய்தேன் என்பதை அமலாக்கத்துறை விளக்கட்டுமே என்றார்.