அவசர வேலையாக இங்கிலாந்து செல்ல வேண்டும்.. உச்சநீதிமன்ற அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரம்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள கார்த்தியை தேடப்படும் நபராக கடந்த செப்டம்பரில் சிபிஐ அறிவித்தது. இந்த லுக்அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தபோதிலும், சுப்ரீம் கோர்ட்டும் அதை நீட்டித்து வருகிறது.
வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், திடீரென தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கும்படி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு அட்மிஷன் விஷயமாக செல்ல வேண்டி உள்ளதை காரணமாக கூறி, அக்டோபர் 19ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சிபிஐ குற்றம்சாட்டுவது போல் தனக்கு வெளிநாடுகளில் ஏராளமான வங்கி கணக்குகள் இல்லை என்றும், இங்கிலாந்து மெட்ரோ வங்கியில் ஒரே ஒரு வங்கி கணக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2016 ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த வங்கி கணக்கிற்கு தான், தனது மனைவி, மகள் தவிர வேறு ஒருவரிடம் இருந்தும் பண பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும், தான் அரசியல் வெளிப்படை தன்மை கொண்ட நபர் என்றும் கார்த்தி தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு துவக்க இங்கிலாந்து அரசு பல கடுமையாக விதிகளை கடைபிடிக்கிறது என்றும், எனவே எப்படி பல கணக்குகளை தன்னால் அங்கு துவக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.