ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கோரி மனு கொடுத்தால் அதில் தன்னுடைய கருத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கோரி மனு கொடுத்தால் அதில் தன்னுடைய கருத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கிறது. தற்போது இவர் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார்.
முன்னேற்றம் இல்லை
இவர் மீது இன்னும் முறையாக வழக்கு பதியப்படவில்லை. இதனால் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. கார்த்தி சிதம்பரம் போன் பாஸ்வேர்டை கூட இன்னும் சிபிஐ தரப்பால் பெற முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 3 நாள்
இந்த நிலையில் மேலும் 6 நாள் கஸ்டடி கேட்டு சிபிஐ வாதாடியது. ஆனால் இப்போது 3 நாட்கள் கஸ்டடி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 6 நாட்கள் அதிகம் , 3 நாட்களை மட்டுமே வழங்க முடியும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கைதுக்கு தடை
இந்த நிலையில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அடுத்த விசாரணை தேதி வரை கார்த்தியை கைது செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மார்ச் 20ம் தேதி வரை அவரது கைதுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
கேவியட் மனு
இந்த நிலையில் அமலாக்கத்துறை இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் தற்போது கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்படி அமலாக்கத்துறை இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தால், தன்னுடைய கருத்தையும் அதில் கேட்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.