வாசன் ஹெல்த் கேர் பங்கு விற்பனை வழக்கு.. அமலாக்கத்துறைக்கு கார்த்தி சிதம்பரம் திடீர் கடிதம்
வாசன் ஹெல்த் கேர் வழக்கில் பங்கு விற்பனை செய்ததில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் விளக்கமளிக்க அவகாசம் கோரி கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லி : பங்குச் சந்தையில் ரூ. 45 கோடி அளவிற்கு மோசடி செய்த விவகாரத்தில் நேரில் விளக்கம் அளிக்க ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் அவகாசம் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலமாக ரூ. 2 ஆயிரத்து 262 கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலாவணி மோசடி செய்து பெற்றுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து நேரில் விளக்கமளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
பெமா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மோசடி வழக்கில் பங்குகள் விற்பனை செய்ததில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், பங்கு பரிமாற்றங்களின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததுபோல் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அட்வான்டேஜ் ஸ்ட்ரேடிஜிக் நிறுவன நிர்வாகக் குழுவிலும் கார்த்தி இடம்பெற்றுள்ளதால் இந்த நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்ட்டது.
இந்நிலையில் 3 தினங்களுக்கு முன் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் அவர் லண்டன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புலனாய்வு ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நேரில் விளக்கமளிப்பதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.