இருமுறை வெளிநாடு போகவாவது அனுமதியுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கார்த்தி சிதம்பரம், நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி தர கோரியுள்ளார்.
டெல்லி: வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் வெளிநாடு செல்லவிருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு 2007ம் ஆண்டு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கார்த்தி சிதம்பரம் கொண்டுவரப்பட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தனக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரினார். ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கார்த்தி சிதம்பரம், நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி தர கோரியுள்ளார். இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கார்த்தி கூறுகையில், நவம்பர் 10ம் தேதி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், உரை நிகழ்த்த உள்ளதாகவும், டிசம்பர் மாதம் தனது மகள் படிப்பு அட்மிஷன் தொடர்பாக கேம்ப்ரிட்ஜ் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பிரமாண பத்திரத்தில், அமலாக்கத்துறையின் விசாரணை முறை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.