கருணாநிதி முதல் குல்தீப் நய்யார் வரை.. முக்கிய தலைவர்கள் மரணம் அடைந்த கருப்பு ஆகஸ்ட்!
இந்தியாவில் மதிக்கப்படும் பல முக்கிய அரசியல் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் இந்த மாதம் மரணம் அடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் மதிக்கப்படும் பல முக்கிய அரசியல் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் இந்த மாதம் மரணம் அடைந்துள்ளனர். இந்த ஆகஸ்ட் மாதம் மிகவும் துக்ககரமான மாதமாக அமைந்துள்ளது.
இந்த வருடம் இந்திய அரசியலிலும், பல்வேறு துறைகளிலும் மிக முக்கியமான வருடம் ஆகும். பல முக்கியமான தலைவர்கள், தங்களது வயோதிகம் காரணமாக அவர்கள் வகித்து வந்த துறையில் இருந்து இந்த வருடம்தான் ஓய்வு பெற்றனர்.
இந்த நிலையில் ஒப்பிட முடியாத சில தலைவர்கள், இந்த மாதம் இயற்கை எய்தி உள்ளனர். இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஈடு செய்ய முடியாத பல முக்கிய தலைவர்கள் காலமாகி உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி
இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வருமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை மரணம் அடைந்தார். இவரது இழப்பு உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வருடத்தின் மிக மோசமான செய்தியாக அவரது மரண செய்தி இருந்தது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.
சோம்நாத் சட்டர்ஜி மறைவு
சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 13ம் தேதி காலமானார். 89 வயதான சோம்நாத் சட்டர்ஜி 10 முறை லோக்சபா எம்பியாக பதவியில் இருந்துள்ளார்.1968ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவில் இடம் பெற்றார். நாட்டில் அதிக ஆண்டுகள் எம்பியாக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. மிக முக்கியமான அரசியல் தலைவராக பார்க்கப்படும் இவரும், இந்த மாதம்தான் மரணம் அடைந்தார்.
வாஜ்பாய் மரணம்
கடந்த 16ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்தார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். பாஜக கட்சிக்கும், இந்தியாவிற்கும் இது பெரிய பேரிழப்பு ஆகும்.
குருதாஸ் காமத் மறைவு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் இந்த மாதம், 22ம் தேதி மரணம் அடைந்தார். முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர் குருதாஸ் காமத் என்பது குறிப்பிடத்தக்கது. 63 வயதில் அவர் மரணம் அடைந்துள்ளார். 5 முறை இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய உள்துறை இணை மந்திரியாகவும், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பினையும் வகித்து வந்துள்ளார்.
குல்தீப் நய்யார் மரணம்
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் இன்று டெல்லியில் மரணம் அடைந்துள்ளார். அவர் 95 வயதில் மரணம் அடைந்துள்ளார். குல்தீப் உருது பத்திரிக்கையாளராக சிறுவயதில் தன் பணியைத் துவங்கியவர். இவர் சட்டம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி பார்வையாளரான இவர், கவனிக்கப்பட வேண்டிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். குல்தீப் நய்யார் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.