கட்டிய கணவனை காத்து நிற்கும் “கர்வா சவுத்” விரதம் - இன்று அனுசரிப்பு
டெல்லி: கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. வடமாநிலங்களில் இந்த விரதம் வெகு விசேஷமாக கொண்டாடப்படும்.
தமிழகத்தில் காரடையான் நோன்பாக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த விரதம் மூலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.
மாங்கல்யம் காக்கும் விரதம்:
இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான் சாவித்ரி கதை சொல்லப்படுகிறது. அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்களை இழந்ததால் காட்டில் விறகு வெட்டி பிழைத்து வந்தான்.
சாவித்ரி கல்யாணம்:
அவனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள் சாவித்ரி. இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் தன் கணவன் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும் அதிகபட்சம் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தாள் சாவித்ரி.
உயிர் நீத்த சத்யவான்:
கணவனின் ஆயுள் நீடிக்கவும், தன் மாங்கல்யத்தை காத்துக் கொள்ளவும் காட்டில் விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாளும் வந்தது. சாவித்ரியின் மடியிலேயே விழுந்து உயிர் நீத்தான் சத்யவான். சத்யவானின் உயிரை பறித்துக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தார் எமதர்மராஜன்.
என் கணவன் எனக்கு வேண்டும்:
கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தன் விரதத்தை அன் றுதான் முடித்திருந்தாள். யார் கண்ணுக்கும் தென்படமாட்டார் எமதர்மராஜன். ஆனால், சாவித்ரியின் பதிபக்தியும், விரத மகிமையும் எமதர்மராஜனை அவளது கண்களுக்கு காட்டிக் கொடுத்தது. சத்யவானின் உயிரை எடுத்துச் செல்லும் எமனை பின்தொடர்ந்தாள். "பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். இது உலக நியதி. அதை நான் மீற முடியாது. அதற்கு யாரும் விதிவிலக்கும் அல்ல" என்று கூறிய எமதர்மன், தர்ம சாஸ்திரங்களை பற்றி சாவித்ரியிடம் விளக்கினான். தன் பின்னால் வரவேண்டாம் என்றும் கூறினான். சாவித்ரி எதையும் கேட்கவில்லை. தொடர்ந்து எமனுடன் வாக்குவாதம் செய்தாள்.
வம்சம் தழைக்க வழி சொல்:
அவள் மீது எமனுக்கு இரக்கம் பிறந்தது. "எடுத்த உயிரை திருப்பி கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், அதை விட்டுவிடு. ஏதாவது வரம் கேள் தருகிறேன்" என்றான். சாவித்ரி சாதுர்யமாக "கற்புநெறி தவறாமல் வாழ்ந்து வரும் என் வம்சம் வாழையடி வாழையாக தழைக்க அருள் புரியுங்கள் தர்ம ராஜனே" என்றாள்.
கேட்ட வரம் தந்தேன்:
உயிரை எடுத்துக் கொண்டு செல்லும் எமன் அவசரத்தில் சற்றும் யோசிக்காமல், "கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்" என்று வரம் தந்தான். தர்மராஜனின் கருணைக்கு நன்றி. தங்கள் வாக்கு, வரம் பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று வேண்டி நின்றாள் சாவித்ரி. அவளது பதிபக்தியையும், சமயோசித புக்தியையும் எண்ணி வியந்த எமதர்மராஜன், சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான் எமதர்மன். அத்துடன் தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
சல்லடை வழியே தெரியும் நிலவு:
கர்வா சவுத் விரதமன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கை.