அஜ்மல் கசாப் பிரியாணி கேட்டதாக 'பீலா'.. வக்கீல் உஜ்வாலிடம் விளக்கம் கேட்கிறது மகாராஷ்டிரா அரசு!!
ஜெய்ப்பூர்: 'மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் சிறையில் மட்டன் பிரியாணி வேண்டும் என தாம் கூறியது வடிகட்டிய பொய் என்று அவருக்கு ஆதரவாக வாடிய உஜ்வால் நிகாம் கூறியிருந்தது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக உஜ்வாலிடம் மகாராஷ்டிரா அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவலின் மகன் இயக்குநராக இருக்கும் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு அண்மையில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் பயங்கரவாத தடுப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டை நடத்தினார்.
இம்மாநாட்டில் மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு ஆதரவாக வாதடிய உஜ்வால் நிகாம் பேசியதாவது:
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையின் போது அஜ்மல் கசாப்புக்கு ஆதரவாக அலை உருவானது; அந்த அலையை தடுக்க விரும்பினோம்.
அதனால் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன், மட்டன் பிரியாணி வேண்டும் என கேட்டு அடம் பிடித்ததாக தெரிவித்தேன். மட்டன் பிரியாணி வேண்டும் என கசாப் ஒரு போதும் கேட்கவுமில்லை. சிறை நிர்வாகத்தினர், அவனுக்கு பிரியாணி தரவும் இல்லை.
வழக்கு விசாரணையின் போது ஊடகங்கள் தன்னை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கின்றன என்பதை அஜ்மல் கசாப் அறிந்து கொண்டான். அதனால், ஒரு நாள் நீதிமன்ற அறையில், தலையை கவிழ்த்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.
உடனே கசாப் கண்ணீர் விட்டதாக ஊடகங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டன. அப்போது தன் சகோதரியை நினைத்து கசாப் கண்ணீர் விட்டதாக சிலர் பேசினர்.
வேறு சிலரோ அவன் பயங்கரவாதியா, இல்லையா என்ற சர்ச்சையை கிளப்பினர். இந்த பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்டவே மட்டன் பிரியாணி வேண்டும் என கசாப் கேட்டதாக பொய்யான அறிக்கை வெளியிட்டேன். பின் இதுபற்றியும், டிவி சேனல்களில் விவாதம் நடைபெற்றது.
இவ்வாறு உஜ்வால் நிகாம் கூறினார்.
சர்ச்சை- விளக்கம் கோர முடிவு
தற்போது உஜ்வால் நிகாமின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா மாநில மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே, வழக்கறிஞர் உஜ்வாலின் கருத்து துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக முதல்வர் படனாவிஸுடன் விவாதித்துள்ளோம். உஜ்வால் நிகாமிடம் விளக்கம் கேட்க இருக்கிறோம் என்றார்.