கசாப் அல்ல.. பெங்களூர் சமீர் சவுத்ரி.. இந்து தீவிரவாதியாக காட்ட நடந்த சதி! மும்பை மாஜி கமிஷனர் பகீர்
மும்பை: மும்பை, முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா எழுதியுள்ள Let Me Say It Now என்ற புத்தகத்தில், தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பெங்களூரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற பெயரிலான ஒரு இந்து போல காண்பிக்க லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி (26/11) மிக மோசமான தீவிரவாத தாக்குதல்கள், மும்பையை உலுக்கியபோது கமிஷனராக இருந்தவர் ராகேஷ் மரியா. அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ள திடுக்கிடும் தகவல்களை பாருங்கள்:
எல்லாமே அவர்கள் தீட்டிய திட்டத்தின்படி நடந்திருந்தால், கசாப், சவுத்ரியாகத்தான் இறந்திருப்பார். இந்த மும்பை தாக்குதலுக்கு ஊடகங்கள் "இந்து தீவிரவாதம்" என்று பெயர் சூட்டி கொட்டை எழுத்துக்களில் முதல்பக்க செய்தி வெளியிட்டிருக்கும். ஏனெனில், பெங்களூரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற பெயரில் போலியான ஐடி கார்டுகளை ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் அமைப்புகள் ரெடி செய்திருந்தன. இதனால்தான் அஜ்மல் கையில், சிவப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது.
சிவப்பு கயிறு
பொதுவாக, இந்துக்கள் இப்படி கயிறு கட்டியிருப்பார்கள். எனவே பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் அஜ்மல் கொல்லப்பட்டதும், அவரது அடையாள அட்டை மற்றும் அவர் கையில் கட்டியிருந்த சிவப்பு கயிறு போன்றவற்றை வைத்து, இந்து என போலீசார் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்பதுதான் பாகிஸ்தான் திட்டம்.
இந்து தீவிரவாதம்
"மும்பையை இந்து பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்கினர் என்று கூறி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகள் வந்திருக்கும். தொலைக்காட்சி சேனல் சீனியர் பத்திரிகையாளர்கள் பெங்களூருக்கு விரைந்து சென்று, 'சவுத்ரி' குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் பேட்டி காண முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அஜ்மல் உயிரோடு எங்களிடம் பிடிபட்டார். விசாரணையில் அவர், பாகிஸ்தானின் ஃபரிட்கோட்டைச் சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப் என்பது தெரியவந்தது" இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையன்
"பாகிஸ்தானில் வசித்தபோது, கசாப்பும் அவரது நண்பர் முசாபர் லால் கானும் தங்கள் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக கொள்ளையடிக்க விரும்பினர், மேலும் இந்த நோக்கத்திற்காக ஆயுத பயிற்சி பெற விரும்பினர். இப்படித்தான், கசாப்புக்கு, லஷ்கர் தீவிரவாத அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டது" என்று தனது புத்தகத்தில் மரியா கூறியுள்ளார்.
தவறான தகவல்கள்
"இந்தியாவில் தொழுகை நடத்துவதற்கு, முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கசாப் தீவிரமாக நம்பிக் கொண்டு இருந்தார். அப்படித்தான் அவருக்கு சிறு வயது முதல் சொல்லிக்கொடுத்து வளர்த்துள்ளனர். மசூதிகள் அதிகாரிகளால் பூட்டப்பட்டுவிட்டன என நம்பினார். ஆனால் அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள்ளேயே தினமும் 5 வேளை, அருகேயுள்ள மசூதியில் தொழும் ஒலி கேட்கும். அந்த தொழுகை சத்தம் தனது கற்பனை என்று அஜ்மல் நினைத்துக்கொண்டு இருந்தார். இதை அறிந்த நான், ஒரு வாகனத்தில் மெட்ரோ சினிமாவுக்கு அருகிலுள்ள மசூதிக்கு அழைத்துச் செல்லுமாறு மஹாலே (விசாரணை அதிகாரி ரமேஷ் மஹாலே)க்கு அறிவுறுத்தினேன். அங்கு நமாஸ் நடப்பதை கண்ட கசாப் திகைத்துப் போனார்" " என்று மரியா மேலும் கூறுகிறார்.
கோபம் இருந்தது
கசாப்பை உயிருடன் வைத்திருப்பது எனது "முதல் முன்னுரிமை". கசாப் மீதான கோபமும் விரோதமும் (மும்பை காவல்துறையினரிடையே) அதிகமாக இருந்தது. சிறையில் இருந்த கசாபைக் கொல்லும் பொறுப்பு தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கு ஐஎஸ்ஐயால் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் மும்பை போலீஸ் பாதுகாப்பை மீறி அஜ்மலை தொடர முடியவில்லை.
தீவிரவாதிகள்
நான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நாளும் கசாப்பை விசாரித்தேன். பயங்கரவாத அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கான ஆழமான பார்வையை இது எனக்குக் கொடுத்தது. எனது அன்றாட தொடர்புகள் கசாபிற்கும் எனக்கும் இடையில் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தின, விரைவில் கசாப் என்னை 'ஜனாப்' (ஐயா) என்று மரியாதையுடன் உரையாற்றத் தொடங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.