'ஹர ஹர மோடி'ன்னு கோஷம் போடக்கூடாது.. பாஜகவினருக்கு சங்கராச்சாரியார்கள் கண்டனம்
வாரணாசி: ஹர ஹர மோடி என்று பாஜகவினர் கோஷமிடுவது தவறு, அது புனித மந்திரங்களை அவமதிக்கும் செயல். அதை அரசியல்மயமாக்கக் கூடாது என்று காசி சங்கராச்சாரியார், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட பல்வேறு இந்து மதத் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாரணாசியிலிருந்து மோடி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு மோடி வாரணாசிக்கு வந்திருந்தார். அப்போது அவரை வரவேற்ற பாஜகவினர், ஹர ஹர சங்கரா என்று கோஷமி்டுவதைப் போல ஹர ஹர மோடி என்று கோஷமிட்டு குதூகலித்தனர். இது இந்து மதத் தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் இப்படி ஹர ஹர மோடி என்று கூறுவது தவறு, அதை பாஜகவினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெயேந்திரர், காசி சங்கராச்சாரியார் உள்ளிட்ட பல இந்து மதத் தலைவர்கள் கூறியுள்ளனராம்.
ஹர ஹர மோடி - கர் கர் மோடி என்பதுதான் பாஜகவினர் தற்போது லேட்டஸ்டாக முழங்கி வரும் கோஷமாகும். இதற்கு இந்து மதத் தலைவர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதால் பாஜகவினர் குழப்பமடைந்துள்ளனராம்.
ஆனாலும் தொடர்ந்து இப்படித்தான் கோஷம் போட்டு வருகின்றனராம், வட மாநிலங்களில். சுவர் விளம்பரம் மட்டுமல்லாமல் கேசட் போட்டும் இந்த முழக்கத்தை வட மாநிலங்களில் குறிப்பாக வாரணாசியில் பாஜகவினர் பிரசாரத்தில் குதித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.