ஜம்மு - காஷ்மீர் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிச்சரிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் புதன்கிழமை காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிச்சிகரத்தின் அடிவாரத்தில் செயல்பட்டு வந்த ராணுவ முகாம் பனியால் மூடப்பட்டது. இந்த விபத்தில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியிலிருந்து 4 ராணுவ வீரர்களின் உடல் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, 4 நாட்களில் மட்டும் பனிச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.