2018 ஜூன் 19ல் நடந்த சம்பவம்.. அதுதான் தொடக்கம்.. காஷ்மீர் பிரச்சனைக்கு அமித் ஷா போட்ட விதை!
காஷ்மீரில் இன்று நடக்கும் மாற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் சென்ற வருடம் ஜூன் மாதமே விதை போடப்பட்டு இருக்கிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று நடக்கும் மாற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் சென்ற வருடம் ஜூன் மாதமே விதை போடப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் இப்போது நடக்கும் மாற்றங்களுக்கு அப்போதே அரசு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அங்கு தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் முக்கிய அரசியல் தலைவர்களும் அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன
ஆனால் இந்த காஷ்மீர் பிரச்சனை, இப்போது அல்ல கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியே முறையாக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அப்போது எடுத்த முக்கிய முடிவு ஒன்றுதான் காஷ்மீரில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக மாறியுள்ளது. காஷ்மீரில் அப்போது ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்தவரான மெகபூபா முப்தி ஆட்சி நடத்தி வந்தார்.
என்ன நீக்கம்
மெகபூபா முப்திக்கு பாஜக ஆதரவு அளித்து வந்தது. ஆனால் திடீர் என்று பாஜக மெகபூபா முப்திக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனால் ஜூன் 19ம் தேதி 2018ம் வருடம் ஆட்சி கவிழ்ந்தது. அன்றுதான் இப்போது நடக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கான விதை போடப்பட்டது. அதற்கு அடுத்த திருப்பமாக 6 மாதம் கழிந்தும் தேர்தல் ஆணையம் காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலை அறிவிக்காமல் இருந்தது.
அடுத்து என்ன
அது மட்டுமில்லாமல், காஷ்மீருக்கு லோக்சபா தேர்தல் அறிவித்த போது கூட அங்கு சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. மத்திய அரசு இன்று நடக்கும் விஷயங்களை மனதில் வைத்துதான் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தவிடவில்லை என்று தற்போது தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நடத்தாத காரணத்தால் இன்னும் காஷ்மீரில் புதிய அரசு பிறக்கவில்லை.
தேர்தல் இல்லை
இதுதான் தற்போது மத்திய அரசுக்கு சாதகமான சூழ்நிலையை காஷ்மீரில் உருவாக்கி உள்ளது.காஷ்மீரில் ஒருவேளை மாநில ஆட்சி நடந்து இருந்தால், அங்கு மத்திய அரசு இவ்வளவு வலுவாக கால் பதித்து இருக்க முடியாது. ஆனால் தற்போது சூழ்நிலை அங்கு அப்படி இல்லை. ஆகவே தற்போது காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் விதை கடந்த வருடம் ஜூன் 19ம் தேதி விதை போடப்பட்டுவிட்டது.
எல்லாம் நடக்கிறது
அங்கு ஆட்சியை கவிழ்த்து, ராணுவத்தை குவித்து, தேர்தலை ரத்து செய்து, தற்போது இணையம் உள்ளிட்ட தொடர்பு சாதனங்களையும் துண்டித்து, அரசு அம்மாநிலத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வைத்துதான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.