காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியலமைப்புப் படி தீர்வு: ஒமர் அப்துல்லாவிடம் மோடி உறுதி
டெல்லி: அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு காஷ்மீர் பிரச்சனையில் நிரந்தரமான உறுதியான முடிவை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புர்கன் வானி கொலைக்குப் பின்னர் காஷ்மீரில் வெடித்த கலவரம் இன்னும் அடங்கவில்லை. தொடர் கலவரத்திற்கு இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். அங்கு இன்னும் நிலைமை சீரடையாமல் இருப்பதால் காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.
அப்போது, அங்கு பல உயிர் பலியாவது குறித்தும், நிலைமை கட்டுக்கடங்காமல் போவது குறித்தும் கவலை தெரிவித்தார் ஒமர் அப்துல்லா. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, காஷ்மீர் வன்முறையில் மக்கள் பலியாவது கவலையை ஏற்படுத்துகிறது என்றும், பலியாகும் மக்களும் நம் மக்கள்தான் என்றும் உருக்கமாக கூறினார்.
மேலும், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரமான உறுதியான தீர்வை எட்ட வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.