காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுகிறதா? ராணுவ குவிப்பின் நோக்கம் என்ன? ஆளுநர் சொன்ன அந்த தகவல் இதுதான்
Recommended Video
ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
காஷ்மீரில் தொடர்ச்சியாக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அங்கு பெரும் பரபரப்பு சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் அரசியல் குழு ஒன்று இன்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த உமர் அப்துல்லா, ஆளுநர் தங்களிடம் தெரிவித்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதை பாருங்கள்:
தீவிரவாதிகள்
உடனடி நடவடிக்கை தேவைப்படும் வகையில் பாதுகாப்பு நிலைமை மோசமாகியுள்ளதாக ஆளுநர் மாலிக் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரை வழியில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன.
வெடிகுண்டுகள்
பாகிஸ்தானால் எல்லையில் அத்துமீறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நமது ராணுவத்தால் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டது. இதை நேற்று மதியம் செய்தியாளர் சந்திப்பில் ராணுவ கார்ப்ஸ் கமாண்டர் மற்றும் டிஜிபி குறிப்பிட்டுள்ளனர். ராணுவத்தால் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அதில் வழங்கப்பட்டன. தீவிரவாத அச்சுறுத்தலின் தீவிரத்தன்மையால் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.
பக்தர்கள், பயணிகள்
இந்தச் சூழலில்தான் அமர்நாத் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை விரைவில் திரும்புமாறு அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது அரசின் பொறுப்பாகும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.
பிரிக்கப்படாது
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள 370வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாகவோ, அல்லது, காஷ்மீரை இரண்டு மாநிலமாக பிரிப்பது தொடர்பாகவோ மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார் என்று உமர் அப்துல்லா தெரிவித்தார்.