நாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள்.. பாகிஸ்தான் என்ற நாடு இருக்காது.. வைரலாகும் ராணுவ வீரர்களின் வார்னிங்
டெல்லி: காஷ்மீர் மாநிலம் யூரியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக தீவிரவாதிகளை தேடி, தேடி வேட்டையாடி வீழ்த்தி வருகிறது இந்திய ராணுவம்.
இந்த நிலையில், ராணுவ வீரர்கள் ஹிந்தியில் பேசும் வீர உரையொன்று, சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. பஸ் ஒன்றில் பிற வீரர்கள் அமர்ந்திருக்க, அதில் வீரர் ஒருவர் நின்றபடியே கூறுவது இதைத்தான்:
நாங்கள் சிங்கங்கள்.. சிங்கத்தின் பிள்ளைகள்
சிங்கங்கள் என்றுமே அஞ்சியது கிடையாது
போங்கள்.. பாகிஸ்தானியர்களிடம் போய் சொல்லுங்கள், நாங்கள் குண்டுகளுக்கோ, கன்னி வெடிகளுக்கோ அல்லது பீரங்கிகளுக்கோ அஞ்சுபவர்கள் கிடையாது என்பதை. நாங்கள் சிம்லா மற்றும் தாஷ்கண்ட் போன்ற ஒப்பந்தங்களுக்கு மட்டுமே மதித்து நிற்கிறோம்.
நீங்கள் அணு குண்டுகளை தயாரிக்கலாம். ஆனால் 1965, 1971 மற்றும் 1999ம் ஆண்டு போர்களை மறந்துவிட்டீர்கள். ஒரே ஒரு இந்திய வீரரால் உங்கள் பீரங்கிகள் பிடுங்கப்பட்டன. உங்களின் அமெரிக்க ஜெட் விமானங்கள், எங்களால் சுட்டு எரிக்கப்பட்டன. வங்கதேசம் என்ற ஒரு நாடு ஒரு நொடியில் எப்படி உருவானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
90 ஆயிரம் பாகிஸ்தான் போர் கைதிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது போர் வெடித்தாலும், காஷ்மீர் இருக்கும். ஆனால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருக்காது. இவ்வாறு நீள்கிறது அந்த வீர வசனம். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.