பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் பிரியவே பிரியாது: பரூக் அப்துல்லா உறுதி
லண்டன்: பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் பிரிந்து செல்லாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர்பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஜம்மு காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பரூக் அப்துல்லா பங்கேற்று பேசியதாவது:
போர் மூளும் என அச்சுறுத்துவது அல்லது நாங்கள் அணு ஆயுத வல்லமை கொண்டவர்கள் என்றோ, அணு குண்டுகளை பயன்படுத்துவோம் என்று கூறுவதோ எந்த வகையிலும் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவாது. பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
பாகிஸ்தானால் காஷ்மீரை கைப்பற்ற முடியாது. இது ஒரு போதும் நடக்கப்போவது இல்லை. ஒருகாலத்திலும் காஷ்மீர், பாகிஸ்தானுடன் பிரிந்து போகவே போகாது.
இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடமே நான் ஒரு கோரிக்கை முன்வைக்க விரும்புகிறேன். சோகங்களுடன் வாழ்வதை விட இணைந்து முன்னோக்கி அடுத்த கட்டத்துக்கு இருநாடுகளும் செல்ல வேண்டும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.