60-வது நாளாக தகவல் தொடர்பு துண்டிப்பு- ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் போராட்டம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 60-வது நாளாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கம், ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகியவற்றுக்காக அம்மாநிலத்தில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஜம்முவில் அரசியல் தலைவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரிலும் படிப்படியாக நிலைமைகளை ஆராய்ந்து விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஶ்ரீநகரில் இன்று பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தங்களது மாநிலத்தில் 60 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் பத்திரிகையாளர்கள் தொழில் என்பது ஒரு குற்றமும் அல்ல. பத்திரிகையாளர்கள் ஊதுகுழல்களும் அல்ல எனவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஶ்ரீநகர் பிரஸ்கிளப்பில் அமைதிப் போராட்டத்தையும் பத்திரிகையாளர்கள் முன்னெடுத்தனர்.