காஷ்மீரில் மனித நேயம்... 84-வயது பண்டிட்டின் இறுதிச் சடங்குகளை நடத்திய முஸ்லீம் மக்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த 84 வயது பண்டிட் ஒருவரின் இறுதிச் சடங்குகளை முஸ்லீம் மக்கள் நடத்தியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டம், மல்வன் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜானகி நாத் (84). தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து காஷ்மீரில் கடந்த 1990களில் வெடித்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்து பண்டிட் சமுதாயத்தினர் இடம் பெயர்ந்து சென்றனர்.
கிட்டத்தட்ட 3 லட்சம் பண்டிட்டுகள் இடம் பெயர்ந்தனர். ஆனால் உயிரையும் பொருட்படுத்தாமல் இவர் மட்டும் வெளியேறாமல் அங்கு வசித்து வந்தார். முஸ்லீம்கள் அதிகமாக வசித்து வந்த அந்த கிராமத்தில் ஜானகி நாத் மட்டுமே காஷ்மீர் பண்டிட். அரசுப் பணியிலிருந்து கடந்த 1990-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரை கிராமத்தில் வசித்துவந்த முஸ்லீம் மக்களே பார்த்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஜானகி நாத் காலமானார். உறவினர்கள் யாரும் அவருக்கு அங்கு இல்லாததால் முஸ்லீம் மக்களே இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.
பண்டிட் ஒருவரின் இறுதிச் சடங்கை முஸ்லீம் மக்கள் செய்துள்ளது நல்லிணக்கம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது.