பெல்லட் குண்டால் தாக்கப்பட்ட 1 வயது காஷ்மீர் சிறுமி.. உலகை அசைத்த புகைப்படம்.. குவியும் கண்டனம்!
காஷ்மீரில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த சிறுமி ஒருத்தியின் புகைப்படம் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த சிறுமி ஒருத்தியின் புகைப்படம் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.
காஷ்மீரில் இந்தியா ஆளுகையில் இருக்கும் பகுதிகள் இருக்கிறது, அதேபோல் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளும் இருக்கிறது. இது இல்லாமல் காஷ்மீருக்கு தனி நாடு அதிகாரமும் சுதந்திரமும் கேட்டு போராடும் போராளி குழுக்கள் நிரம்பி இருக்கும் பகுதிகளும் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளை விட, இந்த போராளி குழுக்களை ஒடுக்கவே இந்திய ராணுவம் அதிகம் முயன்று வருகிறது. இதற்காகத்தான் இந்திய ராணுவம் தற்போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி வருகிறது.
குழந்தை தாக்கப்பட்டார்
இந்த நிலையில் காஷ்மீரின் தெற்கு சோபியான் பகுதியில் ஹெப்பா என்ற 1 வயது குழந்தை பெல்லட் குண்டால் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த குழந்தையின் ஒரு கண் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
எப்படி நடந்தது
கப்ரான் கிராமத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் ஹெப்பா விளையாடிக் கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் போராளி குழுக்கள் இருப்பதாக இந்திய பாதுகாப்பு படைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு குழுமி இருந்த மக்களை நோக்கி ராணுவம் பெல்லட் குண்டுகளால் தாக்கி இருக்கிறது.
மிக மோசம்
இந்த தாக்குதலில்தான் ஹெப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டார். இதனால் அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கண்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த சிறுமிக்கு கண்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவரது கண்ணில் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
உலக நாடுகள்
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளில் உள்ள பல மனித உரிமை போராளிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியா பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தியா 2008லேயே பெல்லட் குண்டுகளை துறப்பதாக கூறிவிட்டு தொடர்ந்து அதை பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்லட் குண்டு என்றால்
பெல்லட் குண்டு என்பது சிறுசிறு இரும்பு குண்டுகள் இருக்கும் குண்டு ஆகும். இதில் மணி போல சிறு சிறு இரும்பு குண்டுகள் 300 இருக்கும் இது மொத்தமாக உடலை துளைத்து தாக்கும் போது, மக்கள் சுருண்டு விழுவார்கள். ஆனால் உயிரிழப்பு ஏற்படாது. கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும். அதேசமயம் இந்த குண்டு காரணமாக இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.