உ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்!
ஆக்ரா: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 300 பேரை உ.பியில் உள்ள ஆக்ரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மற்ற கைதிகளுடன் பேச முடியாதபடி தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என குடும்பத்தினர் கண்ணீருடன் காத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரைப் பார்க்க ஆக்ரா ஜெயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சான்று இல்லாத யாரும், கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பலர் ஏமாந்து திரும்பும் நிலை உள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு காஷ்மீரிலிருந்து ஆக்ரா கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300 பேர் வரை கைது செய்யப்பட்டு உ.பி. கொண்டு வரப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வக்கீலும் கைது
கைதிகளில் பெரும்பாலானவர்களுக்கு 18 முதல் 45 வயதுக்குள் இருக்கும். சிலருக்கு 50 வயதுக்கு மேல் உள்ளது. இவர்களில் பலர் தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். சிலர் கல்லூரி மாணவர்கள், பிஎச்டி படித்து வருவோரும் இதில் அடக்கம். மத போதனையாளர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் என பலரும் கைதாகியுள்ளனர்.
அதிக பாதுகாப்பு
இதுகுறித்து ஆக்ரா மண்டல சிறைத்துறை டிஐஜி சஞ்சீவ் திரிபாதி கூறுகையில், காஷ்மீரில் உள்ள சிறைகளில் இவர்கள் முதலில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 85 பேர் ஆக்ரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பாதுகாப்பான முறையில் இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற கைதிகளுடன் பேச இவர்களுக்கு அனுமதி கிடையாது. சிறையில் தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனுமதியுடன் பார்க்கலாம்
மேலும் பல கைதிகள் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். இவர்களது குடும்பத்தினர் பார்க்க வந்தால், முறையான காவல்துறை சான்று கடிதத்துடன் வந்தால் தாராளமாக பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இல்லாமல் வருவோருக்கு அனுமதி தரப்பட மாட்டாது. காஷ்மீர் கைதிகளால் சிறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற கைதிகளுக்கு தரப்படும் சாப்பாடே இவர்களுக்கும் தரப்படுகிறது. சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இவர்கள் சுதந்திரமாக நடமாடவும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
அலைச்சலை சந்திக்கும் குடும்பத்தினர்
இதற்கிடையே, உரிய காவல்துறை சான்றுக் கடிதம் பெறாமல் சிலர் தங்களது குடும்பத்தினரைப் பார்க்க ஆக்ரா வருகின்றனர். இவர்களுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இதனால் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, பெரும் பொருட் செலவில் பார்க்க வரும் உறவினர்கள் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அடைகின்றனராம். காஷ்மீரில் தொலைத் தொடர்பு வசதிகள் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பதால் அங்கிருந்து சான்றுக் கடிதங்களை பேக்ஸ் மூலம் பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறதாம். இதனால் மீண்டும் காஷ்மீர் சென்று கடிதம் பெற்று மறுபடியும் வர வேண்டியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கண்ணீரில் குடும்பத்தினர்
ரீஸ் என்பவர் கூறுகையில், எனது மகன் குலாம் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் சட்டவிரோதமாக எந்தக் காரியத்திலும் ஈடுபட்டதில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி அவரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர். அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்க முடியவில்லை. அவருக்கு 2 வயதில் மகள் உள்ளார். எனது மருமகளும், பேத்தியும், குலாமைப் பார்க்க கண்ணீருடன் காத்துள்ளனர் என்றார்.
ரீஸ் போல நிறையப் பேர் சோகக் கதையுடன், கண்களில் கண்ணீருடன் ஆக்ரா சிறை முன்பு அலை மோதியபடி உள்ளனர். காஷ்மீர் துயரங்களுக்கு எப்போது முடிவோ!