காஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு ஒன்றில் இந்திய ராணுவ வீரர்கள் விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் இருக்கும் ஷோபியான் பகுதியில் அடிக்கடி இந்திய ராணுவம் என்கவுண்டர் நிகழ்த்துவது வழக்கம். உளவு தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் இங்கே துப்பாக்கி சூடு நடத்துவதும், தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்வதும் வழக்கம்.
கடந்த ஒரு வருடமாக ஷோபியான் பகுதியில் அடிக்கடி இப்படி என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்ளே புகுந்த 18 ஜெட்கள்.. ஏவுகணைகளை திருப்பிய தைவான்.. சீனாவிற்கு ஆட்டம் காட்டும் குட்டி தீவு.. செம
எங்கு நடந்தது
இந்த துப்பாக்கி சூடு அங்கு இருக்கும் அம்ஷி புரா பகுதியில் நடந்தது. இதில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவர் இம்தியாஸ் அஹமது, அப்ரார் அஹமது, முகமது இப்ரார் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் ராஜோரி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காணாமல் போனதாக போலீசாரிடம் இவர்களின் உறவினர்கள் ஜூலை 17ம் தேதி புகார் அளித்துள்ளனர்.
எங்கே வேலை
ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அம்ஷிபுரா பகுதியில் இவர்கள் மூவரும் ரூம் எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜூலை 18ம் தேதி இவர்கள் ராணுவம் மூலம் தீவிரவாதிகள் என்று கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் மூவரும் அப்பாவிகள் என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை
இந்த என்கவுண்டர் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்கவுண்டர் தொடர்பாக இந்திய ராணுவ தரப்பு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், என்கவுண்டரின் போது இந்திய வீரர்களை விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு கூறியுள்ளது.
ராணுவ ஆபரேஷன்
எல்லையில் ராணுவ ஆபரேஷன்கள் குறித்த விதிமுறைகளை அடங்கிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (Armed Forces Special Powers Act AFSPA) இந்த துப்பாக்கி சூட்டில் மீறப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதனால் இந்த வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. 4 வார விசாரணையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
எத்தனை பேர்
ஆனால் எத்தனை ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு இன்னும் தெரிவிக்கவில்லை. சாதாரண கூலி தொழிலாளிகளை ராணுவம் கொன்றுவிட்டது என்று இந்த மூவரின் குடும்பத்தினர் புகார் வைத்துள்ளனர். இந்திய ராணுவத்தினருக்கு எதிராக இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.