3வது நீதிபதி வரவில்லை.. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கை 27க்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370க்கு ஏற்ப, 35ஏ என்ற பிரிவு 1954ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் 35ஏ பிரிவை சேர்த்து உத்தரவிட்டார்.
இந்த அரசியல் சாசன பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதற்கான வரையறையை உருவாக்கும் அதிகாரத்தை அம்மாநில சட்டசபைக்கு அளிக்கிறது.
இந்த சட்டப்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கிறது. காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாது. பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில், சொத்து வாங்க முடியாது.
இந்த பிரிவுகளை சுட்டிக்காட்டி, 'வி தி சிட்டிசன்ஸ்' அரசு சாரா அமைப்பு, உட்பட 30க்கும் மேற்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில், வழக்குகளை தொடர்ந்தனர்.
நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368ன்படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காஷ்மீர் சிறப்பு அரசியல் சட்ட பிரிவு, இது அரசியல் சட்டத்தின் 14, 19 மற்றும் 21ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்பதால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் செயல்பட்டாரா? என்ற சந்தேகமும் மனுவில் எழுப்பப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று கோர்ட் அலுவல் துவங்கியபோது, தீபக்மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் வருகை தந்தனர். மற்றொரு நீதிபதியான சந்திசூட் வரவில்லை.
கூடுதல் சொலிசிட்டிர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக ஆஜராகினார். காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் விசாரணையை டிசம்பருக்கு ஒத்திவைக்க அவர் கோரிக்கைவிடுத்தார்.
மத்திய அரசு தரப்பும், வழக்கை ஒத்திவைக்க கோரியது. இருப்பினும், வழக்கை வரும் 27ம தேதிக்கு ஒத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.
தீபக் மிஸ்ரா கூறுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனவே இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். 27ம் தேதி 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தீவிரவாதிகளும் தங்களுக்கு சாதகமாக இதை பயன்படுத்தி தாக்குதல் நடத்த கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.