கேள்வி கேட்டால்... "நன்றி வணக்கம்" - பிரஸ்மீட்டில் இருந்து எஸ்கேப்பான மெகபூபா
ஸ்ரீநகர்: "காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தில் உங்கள் பங்கு என்ன?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டதால் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா கோபமடைந்தார். தொடர் கேள்விகளால் பிரஸ் மீட்டை பாதியில் முடித்துக் கொண்டு மெகபூபா வெளியேறியதால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். காஷ்மீரில் பல்வேறு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபாவை சந்தித்தார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மாநிலத்தில் நிலவி வரும் கலவர சம்பவங்களில் உங்களது பங்கு என்ன என்று செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் மெகபூபாவிடம் கேட்டதற்கு அவர் மிகவும் கோபமடைந்தார். வன்முறையில் உயிரிழந்தவர்களில் 95 சதவீதம் பேர் இளைஞர்கள். இவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்தான் கொல்லப்பட்டனர். ராணுவ முகாம்களுக்கு சிறுவர்கள் மிட்டாய் வாங்கவா சென்றார்கள்? போலீஸ் நிலையத்தை தாக்கிய 15 வயது சிறுவன் அங்கு பால் வாங்கவா சென்றான் என்று கோபத்துடனேயே, பதில் அளித்தார் மெகபூபா.
காஷ்மீர் விவகாரத்தை கையாளுவதில் உங்கள் பங்கு என்ன என்று நிருபர் ஒருவர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் மெகபூபா, காஷ்மீர் இளைஞர்களை போலீஸ் அதிரடிப்படையினரிடம் இருந்து காப்பாற்றினேன். கொத்தடிமைகளாக இருந்த அவர்களை கத்தியில் இருந்து மீட்டெடுத்தேன் என்றார். ஆவேசமாக பேசிய மெகபூபாவை ராஜ்நாத் சிங் சமாதானப்படுத்த முயன்றார்.
என்றாலும் தொடர்ந்து பேசிய மெகபூபா, உலகின் எந்த பகுதியிலும் வன்முறைக்கு இடமில்லை என்றும் எந்த பிரச்சனையையும் ஊக்குவிக்க வேண்டுமென்றால் நீங்களும் வன்முறையை நாடுங்கள் நன்றி என்றும் சொல்லியவாறே சட்டென இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார் மெகபூபா. இதனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.