ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்
ஸ்ரீநகரில்: காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும் கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்ததால் கடும் கட்டுப்பாடு விதித்த அதிகாரிகள், மீண்டும் செல்போன் சேவையை ரத்து செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு (144 தடை) பிறப்பிக்கப்பட்டது.
செல்போன் சேவை துண்டிப்பு
மேலும் செல்போன் சேவைகளும், இணையசேவைகளும் துண்டிக்கப்பட்டதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அம்மாநில முன்னாள் முதல்வர்கள் உள்பட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஊடரங்கு உத்தரவு, தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
கட்டுப்பாடுகள் தளர்வு
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. இதனால் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டது. இதன்படி ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்தது.
கடும் கட்டுப்பாடு விதிப்பு
இந்நிலையில் காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும் கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தது.. இதனால் பாதுகாப்பு படையினர் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.
வதந்திகள் பரவியது
இதனிடையே வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவையை அனுமதித்தார்கள். ஆனால் அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்தால் செல்போன் தொடர்பு சேவையை பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் ரத்து செய்து உள்ளார்கள்.
துண்டிப்ப ஏன்
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அம்மாநில ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே முன்னெச்சரிக்கையாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அரசின் நோக்கம் என்ன என்பதை காஷ்மீர் மக்களுக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கிறோம் என்றும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.